நிழலின் நிழல்

*

நிசத்தின் நிழலின்
நிழலில் நிசம்
பகலில் நிசம்
இரவில் நிழல்

பருவமாற்றத்தில்
காணமல்போன
நிழலின் நிசம்

நிசமில்லா நிழலில்
நீங்கமுடியாத
நிழலின் நிழல்

மீதமிருப்பது
நிழலா நிழலின் நிழலா ?
தெரியவில்லை

*

மும்பை - சென்னை - கொல்கத்தா

*

எங்கவூட்டு திண்ணைல குந்திகினிங்க
எங்காத்து விருந்தாளின்னு சொல்லிகினிங்க
எங்கூட்டு சோத்த மொதல தின்னுகினிங்க
இப்ப சப்பாத்திதான் புடிக்குதுன்னு சொல்லிகிரிங்க

கூரையபிறிச்சி மாடியாக கட்டுரனிங்க
உங்களதானே நம்பி என்கூட்ட தந்தோமுங்க
விதவிதமா கட்டி கட்டி வியக்கவச்சிங்க
வீட்டுக்குள்ள நுழையுரப்ப எட்டிவுதக்குறிங்க

எங்கூட்டு சாதிசனம் வந்துனிக்கைல
எடுபுடி வேலைக்கூட எங்களுக்கிள்ளிங்க
என்கூடுதானே என்று எதித்து கேட்டாக்க
தேசியம்ன்னு என்ன என்னம்மோ மிரட்டுறிங்க

என்கவூடு எங்களுக்குன்னு சொல்லக்கூடதாங்க ?
எந்த ஊட்ட என்கவூடுன்னு நாங்கசொல்லுரதுங்க ?
உங்கவுணவ எங்களையும் திங்கசொல்லுரிங்க
என்கவூட்டுலஇருந்துக்கினு அத இன்னாத்துக்கு திங்கோனுங்க. ?

எங்க நீங்க போனாலும் அவங்க மாறோனுமுங்க
நீங்க மட்டும் எப்பொழுதும் மாறமட்டிங்க.
நீங்க கூத்தடிச்சி எங்க கலாச்சாரத்த சிதசிடுவிங்க.
எதுத்து கேட்டா கூடிநின்னு கும்மியடிக்குரிங்க.

இப்பகூட ஒன்னும் கெட்டுப்போகலிங்க
எங்கூட்டுல நல்லா வந்து குந்திகிடுங்க
சோறு போடும் பூமி உணவ தின்னுகிடுங்க பொறவு
நீ வேற நான்வேரன்னு நினைக்கமிடமில்லிங்க.

*

வெண்புறா

*
ஐந்து நிமிடத்தில் தொடரூந்து வரவிருக்க, தொடரூந்தை பிடிக்காவிடில் கிளாங்கில் இறுதி பேருந்து பிடிக்க சிரமமாகிவிடும் என்ற நிலையில், குடிநீர் குடிக்காமல் ஒரு அடிக்கூட நடக்கயியலாது என்று முடிவாக கூறிவிட்டார் முகவைக்கரர், வேறுவழியில்லாமல் குடிநீரை தேடி கே.எல் சென்ட்ரலில் அலைந்தோம், ஒரு வழியாக ஒரு கடையில் குடிநீர் வாங்கி முகவையாருக்கு கொடுத்துவிட்டு அறிவிப்பு பலகையை பார்க்க ஒரு நிமிடத்தில் தொடரூந்து வருவதாக தெரிந்தது. பயணச்சீட்டை எந்திரத்தில் காட்ட எனக்கு வழிகிடைத்தது, ஆனால் ஜெகுக்கும், முகவையாருக்கும் எந்திரம் வழிவிட மறுக்க, காவலர் உதவி புரிந்தார்.

அவசரமாக கீழ்தளத்திற்கு இறங்கி தொடரூந்து அறிவிப்பு பலகையை பார்க்க இருபது நிமிடங்கள் கூட்டப்பட்டிருந்தது. வண்டிக்கு காத்திருந்த அனைவரின் முகத்திலும் ஏமாற்றம். முகவயாரை காண திரும்பிய பொழுது அழகியபாதங்களை ஒவ்வொரு படியாக வைத்து சிறு புன்னகையுடன் மேகத்தை உடையாக அணிந்து ஒரு வெண்புறா வர, கேமரனின் குளிர்காற்று துமியோடு கே.எல் சென்ட்ரல் கே.டிஎம் நடைமேடையில் வீசியது.

தண்ணீ குடிக்கலைனா தலைவலி வரும் என்று தன் பலவருட ஆராச்சியின் முடிவை அந்த நடைமேடையில் வெளியிட்டு தொடர்ந்து பேசினார் முகவையார். ஆனால் எனது எண்ணம்,கவனம் அந்த வெண்புறா எதிர்திசையில் செல்லும் தொடரூந்து மேடைக்கு செல்லக்கூடாது என்றுதான் இருந்தது, அந்த சிறிய பாதங்கள் நாங்கள் காத்திருக்கும் தொடரூந்து நடைமேடையை நோக்கி வந்து எங்களுக்கு சற்று அருகாமையில் நின்றது. தொடரூந்து வருகிறதா இல்லையா என்பதை பார்ப்பது போல அது இருந்த திசையை நோக்கி அடிக்கடி பார்த்தே பதினைந்து நிமிடங்கள் செல்ல, தொடரூந்து வருவதற்கான நேரம் இன்னும் இருபது நிமிடங்கள் கூட்டப்பட்டது, இன்று பேருந்தை பிடிப்பது கடினம்தான் என்று எண்ணினாலும், வெளியில் இருந்தபொழுது ஏற்பட்ட பதட்டம் அப்பொழுது இல்லை, வேகவேகமா கூட்டிட்டு வந்திங்களே இப்ப என்னாச்சி என்று கடிந்துகொண்டார் முகவையார். ஆனால் சில நிமிடங்களிலேயே தொடரூந்து வந்துவிட்டது.

நாங்கள் தொடரூந்தின் கதவை நோக்கி செல்ல முதல் வாயில், வெண்புறாவின் அருகில் இருக்க, நான் அங்கே நின்றுக்கொண்டேன், ஆனால் முகவையாரும் ஜெக்கும் தங்களை வயதானவர்கள் என்று நிரூபிக்க என்னையும் வெண்புறாவையும் தாண்டிச்சென்று அடுத்த வாயிலில் ஏறிக்கொண்டனர். உள்ளே ஏறியதும் ஒரு இருக்கை எனக்கு கிடைக்க மற்ற இருவரும் இருக்கை கிடைக்காமல் என்னை நோக்கி வந்தனர், என்னருகில் இருந்த மற்றொரு இருக்கையில் ஜெக் அமர்ந்துக்கொள்ள முகவையார் நின்றுக்கொண்டு வந்தார், வயதானகாலத்தில் நிக்காதிங்க இங்க அமருங்கள் என்று நான் கூறியும் அவர் அமரவில்லை, அமராததிலும் ஒரு வசதி, இடது கதவோரம் அமர்ந்திருந்த வெண்புறாவை காண சுலபமாக இருந்தது, ஆனால் வெண்புறாவுக்கு அருகில் அமர்ந்திருந்தவர் வெண்புறாவை மறைத்தவாறு இருந்தார், முகவையாரின் மொக்கைகளை கேட்டுக்கொண்டே வெண்புறாவை பார்த்துக்கொண்டே சென்றேன்.

சுபாங் ஜெயாவில் பலர் இறங்க முகவையாருக்கு ஒரு இருக்கை கிட்டியது எங்களை விட்டு சற்று தள்ளி, அதே சமயம் வெண்புறாவின் அருகிலும் ஒரு இருக்கை காலியாக இருந்தது அங்கு சென்று அமர்ந்துவிடலாமா என்று என்னிக்கொண்டிருக்கும் பொழுதே ஒருவர் அங்கு சென்று அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில் என்னருகில் ஒரு இருக்கை காலியாக முகவையாரை அழைத்து என்னருகில் அமர சொன்னோம், முகவையார் வந்தபிறகு இடதுபக்கம் பார்த்தால் வெண்புறாவின் இருக்கை காலியாக இருந்தது, வயதான மனிதரை இங்கு அமரவைக்க போய் வெண்புறாவை விட்டுட்டமே, இப்ப எங்க தேடுறது யார கேக்குறது என்று மனம் என்னக்குள்ளே கேட்டுக்கொண்டது, ஆனால் சிறிது நேரத்தில் வெண்புறா அமர்ந்திருந்த இருக்கைக்கு வலபக்க இருக்கைக்கு பின்னல் வெள்ளையுடை அணிந்த புறா இருப்பது தெரியவர குளிர் தாளாமல் வெண்புறா பறந்து பின்னிருக்கைக்கு சென்றிருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டோம், ஆனால் தனியாக வந்த வெண்புறா அருகில் அமர்ந்திருக்கும் மலாய் புறாவிடம் பேசிக்கொண்டு வருவதை பார்த்து சற்று சந்தேகம் எழுந்தது, நான் தேடும் வெண்புறாதானா இது என்று சந்தேகம் வர அடுத்த நிறுத்தத்தை பார்ப்பது போல் நடந்து சென்று பார்க்க சரியாக தெரியவில்லை. நாங்கள் வர இருபது நிமிடம் ஆகும் அதற்குள் தொடரூந்து நிறுத்தத்துக்கு வந்துவிடுங்கள் என்று எங்களை கொண்டு வந்து விட்டவருக்கே அழைத்து கூற அவர் நிலையத்திற்கு வந்துவிடுவதாக கூறினார்.

ஆனால் அதற்க்கு அடுத்த நிறுத்தத்தில் வேறு புறா அங்கிருந்து பறந்து செல்ல முகவையாரும், ஜெக்குவும் என்னை ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள், வயதானவர் முகவையார் என்று நான் பலமுறை உண்மையை கூறியதற்கு அந்த பெரியவர் அப்பொழுது பழிதீர்த்துக்கொண்டார். போகட்டும் அதில் துளியும் வருத்தமில்லை ஆனால் எப்பொழுது அந்த வெண்புறா பறந்தது என்றுகூட பார்க்கவில்லையே என்ற எண்ணம்தான் என்னை திட்டிக்கொண்டு இருந்தது. புகிட் படாக் கடந்ததும் மூவரும் கதவின் அருகினில் வந்து நின்றோம் அது வெண்புறா அமர்ந்திருந்த இடத்துக்கு மிக அருகில் இருந்தது, முகவையாரும், ஜெக்கும் இன்னும் பலமாக என்னை ஒட்டிக்கொண்டிருன்தனர், கிளாங் நிறுத்தத்தை நெருங்கியவுடன் சிறு புன்னகை மற்றும் பொய் கோபத்தோடு வெண்புறா முன்பு அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னாலிருந்து எழுத்து வர மூவரும் மௌனமாகினோம். தமிழ் புறா என்பதால் நாங்கள் பேசிய அனைத்தும் புரிந்திருக்கும் ஆகவே அந்த சிறு புன்னகை மற்றும் பொய் கோபம் புறாவிடமிருந்து.

எங்களை கடந்து வெண்புறா சென்றாலும் பயணசீட்டை எந்திரத்தில் காட்டிவிட்டு நிலையத்தின் வாயிலிலே நின்றுக்கொண்டது, டேக்சிகாரர் வந்திருக்ககூடாது என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே தோ வந்துட்டேன் என்பது போல கையை உயர அசைத்தார், வேண்டுமென்றே மெதுவாக திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே டேக்சியை நோக்கி நடக்கம் வெண்புறா இன்னும் நிலையத்தின் வாயிலிலேயே நின்றிருந்தது, வண்டி கிளாங் தொடரூந்து நிலையத்திலிருந்து கிளாங் பேருந்து நிலையத்தை நோக்கிசென்றது.

அப்பொழுதும் வெண்புறா நிலையத்தின் வாயிலில் ஒரு இருக்கையில் அமர்ந்து எங்கேயோ பார்த்துகொண்டிருந்தது.....

குறிப்பு : இந்த ,மொக்கை `ஒரு தமிழனின் குரலு`க்காக கட்டாயத்தின் பெயரில் எழுத்தப்பட்து.

எளியவழியில் ஞானம் பெற....

^

"ஷிம்ஹோ சிஸா சஷ்ச்தத்தா ஷம்னா
சிரிஷ்ஷச்த்த சின்ஷியாரி ஷய் ஷக்தே"

ஞானம் என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால்தானே. ஞானத்தின் இன்பத்தை அனுபவிக்கமுடியும்,
ஞான அனுபவம் பற்றி பலர் பலவிதமாக கூறுகின்றனர் நான் ஞானம் பெற்றகதையை உங்களுக்கு கூறலாம் ஆனால் உங்களுக்கு எப்படி புரியும், நீங்கள் அறிவாளிகள், ஆறறிவுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்ளலாம், ஆனால் அது அனைத்தும் நீங்களாகவே கற்றது கிடையாது அனைத்தும் கற்பிக்கபட்டவையே, தேனின் சுவை இப்படித்தான் இருக்கும் என்று ஒருவருக்கு மிகச்சரியாக கூறிவிடமுடியாது, எப்படி கூறினாலும் அவர் தேனை சுவைக்கும்போளுது வேறு விதமான சுவையை உணர்ந்ததாகத்தான் கூறுவார், ஆனால் ஏற்கனவே தேன் குடித்தவரிடம் தேனின் சுவை இப்படித்தான் இருக்கும் என்று கூறினால் அவரும் ஏற்றுக்கொள்வார்.

ஆகா ஞானம் அடைந்தவர்களை ஞானமடைந்தவர்களால் தான் உணரமுடியும் மற்றவர்கள் என்ன முயற்சி செய்தாலும் தவறாகத்தான் விடை கிடைக்கும், ஞானமடைந்தவன் என்று கூறிக்கொள்பவர்கள் பலரும் பலவிதமாக ஞானத்தை பற்றி பரப்பிவருகிறார்கள். ஞானத்தை இமையமலை சாரலில் தோண்டி எடுத்துக்கொண்டு அதன் சூடு குறைவதற்குள்ளே அடுத்த விமனத்தை பிடித்து அமெரிக்கா சென்று, முணியாண்டி விலாஸ் போல கடைபரப்பி அனைத்து வகை ஞானங்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கிறார்கள், சில நாட்களிலேயே ஞானத்தின் தயவால் பல ஏக்கர் ஆசிரமம். பலமாநிலங்களில் ஆசிரமம் என்று அமெரிக்க வாழ்க்கை, கடவுளை விடுத்து அன்பை விதை அல்லது கடவுளும் அன்பும் ஒன்றே, இதுதான் ஞானத்தின் மூலதன பொருளாக விற்க்கபடுவது, ஆனால் ஞானத்தை கொண்டுவந்தவரின் புகைப்படமும், அவர் ஆசணினி புகைப்படமும் கடவுளாக பாவிப்பதை ஞானம் தடுக்காது மாறாக ஏற்றுக்கொண்டு உற்சாகப்படுத்தும்.

இமையமலை சாரல்களிலும், பாரத தேசத்திலும் (?), பரதேசி போல பல வித்தைகளை கற்றுக்கொண்டு சுற்றித்திறியும் ஆசான்கள் தங்கள் சீடர்களை அமெரிக்கா அல்லது ஐரோப்பாவுக்கு மட்டும் அனுப்பிவைப்பார்கள், எல்லா சீடர்களும் தங்கள் ஆசான் சொல்வதாலே செல்கிறேன் என்று கூறுவது ஞானத்தின் பக்கவிளைவு, எதாவது வேதத்தில் மேற்கில்தான் செல்லவேண்டும் என்று கூறுகிறார்களோ என்னவோ ?, ஆபிரிக்க நாடுகளுக்கு அல்லது பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கோ அவர்கள் செல்லக்கூடாது என்று ஆசான்கள் மௌனத்தால் சொல்ல சீடர்கள் கவனமாக குறிப்பெடுத்துக்கொள்வார்கள் (ஓரிருவரைத்தவிர), தொடக்கத்தில் பிச்சைகாரன் போல காட்சியளிப்பவர்கள் , செருப்பில்லாமல் நடப்பவர்கள், எளிமையை கொள்கையாக கொண்டவர்கள் பிற்காலத்தில் பி.எம்.டபள்யு வண்டி, உயர் தர விமானத்தில் முதல் வகுப்பில் தான் செல்லவேண்டும் என்று தாங்கள் பெற்ற ஞானம் கட்டளையிடுவது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். கடவுளை பற்றிய கேள்விகளுக்கு சாதுரியமாக பதில் சொல்லி தங்களையே கடவுளாக (மறைமுகமாக ) தரிசிக்கவைப்பது ஞானத்தின் இரண்டாம் நிலை.

தாங்களாகவே வடிவமைத்த யோக செய்முறையை (ப்ராடைக்ட்) மக்களுக்கு பரப்புவதே இவர்கள் பெற்ற(?) ஞானத்தின் குறிக்கோள், ஏழைகளுக்கு ஞானத்தின் பாதையில் கூட இடம் கிடைப்பது குறைவுதான், டாலர்கள், ஈரோக்கள் மாதாம் மாதம் காட்டும் பொழுதுதான் ஞானத்தின் பாதை வாழ்வின் இறுதிவரை கிடைக்கும் ( ஞானம் கிடைக்காது என்பது வேறு விசயம்), பொருளாதரத்தை நோக்கி ஓடும் அவசர வாழ்வில் மனவழுத்தம் என்பதுதவிர்க்கமுடியாத ஒன்று, அதை தவிர்ப்பதுக்காக/குறைப்பதற்காக சந்தையில் கிடைக்கும் யோக ப்ராடைட்டுகளை நம்பி மக்கள் செல்லவேண்டி உள்ளது. ப்ராடைக்ட் வேலை செய்யும் பொழுது ப்ரடைக்டை விற்பவர் கடவுளாகிறார், ப்ரடைக்டுகள் வேலைசெய்வதை ஆயிரம் பக்கத்தில் இந்த ஆசான்கள் விளக்கினாலும் அதன் அடிப்படை தத்துவம் ஒன்றுதான் அது "நம்பிக்கை".

காவியுடையில் முதல் வரியில் எழுதிருப்பது போல புரியாத(புரியாத மொழியில் ) அல்லது வெகு சிலருக்கே புரியும் வசனங்களை பேசி கைவிரல்களை ஒருதினுசாக வளைத்து விரல் நாட்டியம் ஒரு நிமிடம் நடத்திவிட்டு, நான் எப்படி ஞானம் அடைந்தேன் என்று தன் இமையமலை வரலாறை அல்லது ஏதாவது மலையில் வாழ்ந்த வரலாறை கூறி தானும் இந்த உலகமும் வேறல்ல என்ற நிகழ்வை(?) கூறும்பொழுதே மக்களுக்கு பாதிக்கு மேல் நம்பிக்கை வந்துவிடும், அவர் மகானாக பார்க்கபடுவார், பிறகு அவர் வாக்கே வேதமாகும், இப்பொழுது அவர் ப்ராடைக்டை அவர்கள் முழு மனதுடன்/ நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்யும் பொழுது அது வேலை செய்வதாக தோன்றும், வேலைசெய்வது நம் நம்பிக்கைதான். பலரும் அவரது மனபாரத்தை இறக்கிவைக்கத்தான் நேரம்/ஆள் தேடுகின்றனர். அதற்க்கு இந்த ஆசான்கள் கிடைக்க அவர்கள் மீது பாரத்தை இறக்கிவைத்துவிட்டு (எண்ணத்தால் இறக்கிவைத்துவிட்டு) மனம் லேசாக உணர்கின்றனர். மனமே அனைத்துக்கும் காரணி என்று உணருபவர்களுக்கு எந்த ஊன்றுகோலோ அல்லது பிடிமானமோ தேவைப்படாது. அதாவது இந்தவகை ப்ராடைக்டுகள் அல்லது ஆசான்கள் தேவைபடாது.

கடவுள் படத்துக்கு பதிலாக தன் படத்தையோ அல்லது தன் முன்னோர் படத்தையோ வைத்து வழிபட்டாலும் ஒரே விளைவைத்தான் கொடுக்கும் என்ற எண்ணம் மனதில் தோன்றினாலே உங்கள் மனதின் மறுப்பக்கம் தெரிய ஆரம்பிக்கும், சந்தையில் கிடைக்கும் யோகவகை ப்ராடைக்ட்டுகளை உபயோகிப்பதும் உபயோகிக்காமல் இருப்பதும் அவர் அவர் விருப்பம்,

ஞானம் அடைந்தேன் என்று கூறியவர்கள் அன்பைத்தவிர வேறு ஏதும் சொன்னதாக தெரியவில்லை.

குறிப்பு :

(அ) இந்த பதிவு கார்பரேட் யோக சாமியார்களுக்கு மட்டும் பொருந்தும்.

(ஆ) தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள இரண்டு வரிகள் (புரியாத) மகான் ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள் அருளிய பித்தபுரானத்திலிருந்து எடுக்கப்பட்டது.

(இ) தந்திரம் கற்கவேண்டும் (மோதிரம் எடுப்பது, கையிலிருந்து விபூதி வரவழைப்பது, நாக்கிலிருந்து லிங்கம்) என்று விருப்பபடுபவர்கள் மூன்று , ஆறுமாத டிப்ளமோ கோர்ஸ் சேரலாம்.

என் தேவதை

*

பேரூந்து டோல்கேட்டை கடக்கும்பொழுது பெரும்பாலான பயணிகள் இறங்கிருந்தனர், வெளியே பார்த்துக்கொண்டே மிக வேகமாக குறுஞ்செய்தியை கைபேசியில் இருந்து அனுப்பிக்கொண்டிருந்தாள் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்த பெண், அவள் விரலின் வேகத்திற்கு கைபேசி விசைகள் ஈடுகொடுக்கமுடியாததால் எங்கோ பார்த்துக்கொண்டே செய்தியை அடித்துக்கொண்டிருந்தாள் அந்த வேகமே அவள் கல்லூரி மாணவி என்று உறுதிசெய்ய போதுமானதாக இருந்தது . அவளுக்கு இரண்டு இருக்கைகளுக்கு முன்பு பச்சை வண்ணத்தில் உடையணிந்திருந்த காதலர்கள் இருபது வயதுகூட கடந்திருக்காது இருவருக்கும். காதலன் மட்டும் முன்னிருக்கை கம்பியை பிடித்து தலையை குனிந்துகொண்டிருந்தான் அவனுக்கு தெரிந்தவர் அந்த நிறுத்தத்தில் ஏறிவிட்டார் போல.

வண்டி பாலத்தை கடக்கும்பொழுது திருவரங்க இராசகோபுரம் தெரிய அதை பார்த்துக்கொண்டே இருந்தேன் பசுமையான மரங்களுக்கு நடுவில் இராசகோபுரத்தின் மேல்பகுதி தெரிய என் முகத்தில் சிறு புன்னகை , உடலில் சிறு அதிர்வு , காரணம் தெரியவில்லை பிறகு தெரிந்தது என்னருகில் வானிலிருந்து வெள்ளையுடையில் தேவதை வந்தமர்ந்திருந்தாள் திருவானைக்கோவில் கோபுரத்தை பார்த்துவிட்டு திரும்பும்பொழுதுதான் அவள் இருப்பை உணரமுடிந்தது. வெங்கடேசா திரையரங்கை கடக்கும் பொழுது அவள் என்னை முழுவதுமாக ஈர்த்திருந்தாள். திருவானைக்கோவிலை கடந்து ஒரு சிறு பாலத்தின் மீது செல்லும்பொழுது பாலத்தின் கீழ் தொடரூந்து சென்றுக்கொண்டிருந்தது, தொடரூந்து எழுப்பும் ஒலியை இசையாக பாவிக்கும் மனநிலையில் இருந்தேன். மாம்பழச்சாலை சிக்னலில் வண்டி நிற்க, திருவரங்கம் செல்லும் சாலை முகப்பில் ஒரு மரத்தின்கீழ் உள்ளங்கை வியர்வையால் ஈரமான அட்டையின் நடுவில் சொருகப்பட்ட ரோசாவோடு நின்றுகொண்டிருந்தான் ஒரு இளைஞன். காதலை சொல்ல தேதிகுறித்துவிட்டான் போலும், சிகப்பு விளக்கிலிருந்து பச்சைக்கு மாற்றப்பட்ட பின்னும் வண்டி நகரவில்லை, வாகன நெரிசல், வண்டியில் இருந்த சிலர் செவிகளை மூடிக்கொண்டனர் பலரும் விருப்பமில்லாமல் வண்டியில் அமர்ந்திருந்தனர் அதற்க்கு காரணம் வாகனங்களில் ஒலியாக இருக்கலாம், ஆனால் எனக்கு என் இதயம் துடிக்கும் ஒலிய்யத்தவிர வேறு எதுவம் கேக்கவில்லை. மீண்டும் என் பார்வை திருவரங்க சாலையை நோக்கி திரும்பியது.

இரண்டு மூன்று பெண்கள் அவனை கடக்கும் பொழுது ஈரமான அட்டையையும் அதனுள் இருந்த ரோசவயையும் தன் முதுகுக்கு பின்னால் மறைத்துக்கொண்டான். அவர்கள் அவனைக்கடந்த பிறகு ஒரு காலால் தரையை உதைத்துவிட்டு இரண்டு அடி பின்னல் நடந்து கடை படிக்கட்டில் தலையில் கையை வைத்து குனிந்துக்கொண்டான். மூன்று பெண்களும் முக்கியசாலையின் வலது பக்கத்தில் திரும்பியவுடன் நடுவில் இருந்தவளிடம் மற்றவர்கள் ஏதோ சொல்ல வெட்கமும் கோபமும் கலந்து பதில் கூறிக்கொண்டிருந்தாள். வண்டி நகர விழித்திரையில் இருந்து திருவரங்கம் சாலை மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன் மரத்தடியில் தலையில் வைத்தக்கை எடுக்காமல் அப்படியே அதே படிக்கட்டில் அமர்ந்திருந்தான் அந்த இளைஞன், என்னருகில் இருந்த தேவதை அந்த சாலையில் என்னைநோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தாள், திரும்பி என்னிருக்கைக்கு அருகில் பார்க்க இங்கும் இருந்தாள்.

காவிரிப்பாலத்தில் செல்லும்பொழுது குளிர்காற்று வீசியதிலிருந்தே ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது. வாகனங்களை ஓரத்தில் நிறுத்திவிட்டு நடைப்பாதையில் மக்கள் நின்றுக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் திருமணமானவர்கள் ஏன் காதலர்கள் இங்கு வருவதில்லை என்று யோசித்துக்கொண்டே திரும்ப, தாயுமானவர் கோவில் தெரிந்தது, அதன் அருகில் இருக்கும் கணேசனும் விழித்திரையில் வந்து சென்றான். அண்ணா சிலையை கடந்தபொழுது அருகிலிருந்த தேநீரகத்தில் அதிகளவில் மாணவர் கூட்டம் காணநேர்ந்தது, வண்டி சத்திரத்தில் நின்றவுடன் அனைவரும் இறங்கிவிட்ட நிலையிலும் எனக்கு இறங்க மனமில்லை. வண்டியில் நான்மட்டும் சிலநொடிகள், வண்டியை விட்டு இறங்கும்பொழுது என்னுடன் தேவதையும் இறங்கினாள்.

நேராக கால்கள் காயத்திரி தேநீரகத்துக்கு சென்றது, ஒரு காபி மட்டும் வாங்கிக்கொண்டேன், உள்ளே அதிகளவில் மாணவர்கள் இரு பிரிவை சேர்ந்தவர்கள், அதிக இரைச்சல், அதிக சிகரட்புகை இருக்கமுடியாமல் வெளியே படிக்கட்டில் நின்றுக்கொண்டு காபியை குடிக்க தொடங்கினேன் நல்லவேளை இன்று வெளியே நிற்க அனுமதி கிடைத்தது.

மெதுவாக பேருந்து நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேரூந்தில் வேகமாக நடந்து சென்று ஏறிக்கொண்டேன் வழி கோர்ட் என்பதை மட்டும் பார்த்து ஏறிவிட்டேன், அதன் அருகில் இருந்த அமெரிக்கன் மருத்துவமனையை பார்க்கவில்லை, வண்டி ஜோசப் கல்லூரி வாயிலை கடக்கும் பொழுது தேவதை வண்டிக்கு முன்னாள் சென்றுக்கொண்டிருந்தாள். புளுதிகளுக்கு மத்தியில் தெப்பக்குளம் தெரிந்தது. தலையரன் வாயிலில் அதிக மக்கள் கூட்டம், சோபீஸ் கார்னரில் பல கல்லூரி மாணவிகள் வண்டியில் ஏற வண்ணமயமானது பேரூந்து. அவர்களுக்கு நடுவில் இன்னும் அழகாக வெள்ளையுடையில் தெரிந்தாள் என் தேவதை. ஆம் அவள் என் தேவதை என்று சொல்லும் அளவிற்கு மௌனத்தின் புரிதலில் இணைந்திருந்தோம். ஒலி மொழிகளின் புரிதலை விட மௌனத்தின் பரிமாற்றம் ஆளுமை கொண்டதாக தோன்றியது,

தில்லை மருந்து வாசனைகளை கடந்து நான்கு சாலைகளில் பச்சைவிளக்குக்காக பேரூந்து நிற்க, எஸ்.வீ.ஆர் உணவகத்தின் அருகிலிருந்து காட்சிக்கொடுத்தாள் என் தேவதை, அடுத்து மருத்துவமனை நிறுத்தத்தில் வண்டி நிற்க, முன் பக்கமாக ஒரு பெண் வண்டியில் அலைபேசியில் பேசிக்கொண்டே ஏறி இரண்டு பயணசீட்டுக்களை வாங்கி மீண்டும் அலைபேசியில் பேச்சை தொடர்ந்தாள், மற்றொரு பயணச்சீட்டுக்கு வண்டியின் பின்பக்கமாக ஒருவன் எறிருப்பான் என்று நினைத்து திரும்ப ஷு, சலவை செய்த சட்டை, ஜீன்ஸ், சீவிய தலைமுடியாக ஒருவன் காட்சியளித்தான், கல்லூரி படிக்கும் காதலர்களுக்கான இலக்கணம் சரியாக இருந்தது அவனிடத்தில். என் தேவதை பயணசீட்டு வாங்கிவிட்டாளா என்று அவளிடம் கேட்க, அருகில் இருந்தவன் என்னை மேலும் கீழுமாக பார்கிறான், எங்கும் எனக்கு பயணச்சீட்டு தேவையில்லை என்று கூறினாள் என் தேவதை, வயதான பாட்டி வர என் இருக்கையை அவருக்கு கொடுத்துவிட்டு தேவதையின் அருகில் நின்றுக்கொண்டேன். டேப் வளாகத்தை கடந்து வண்டி சென்றுக்கொண்டிருந்தது, என் தேவதை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள், அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவளுக்கு ஒரு இருக்கை கிடைக்க வண்டியின் பின் பக்கம் ஒரு முறை அவள் பார்த்தாள் விழிகளின் வழியே எதோ செய்தி சென்றுக்கொண்டிருந்தது , எனக்கு பின்னாலிருந்து முன்பு பார்த்த ஷு அணிந்திருந்த கால்கள் என்னை கடந்து சென்றது, என் தேவதையிடம் பேசிக்கொண்டிருந்ததால் அவனை பார்க்கவில்லை, ஆனால் அனைவரும் ஏன் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சந்திப்பு நிறுத்தம் வந்தவுடம் என் தேவதை என்னருகில் வந்து ஒரு முறை கண்களை சிமிட்டிவிட்டு வண்டியிலிருந்து இறங்கிச்சென்று சிறிது நேரத்திலேயே மறைந்தாள். வண்டி வளைந்து செல்லும்பொழுது அருகில் இருந்த ஒரு பொது தொலைபேசி நிலையத்திலிருந்து என்னபோல ஒருவன் பேசிக்கொண்டிருந்தான், இப்பொழுது என் தேவதை காட்சிக்கொடுக்கவில்லை இதயத்துடிப்பு அதிகரிக்க அவளை கண்கள் தேடிக்கொண்டிருந்தது. அதற்க்குள் மத்திய பேரூந்து நிலையம் வந்துவிட்டது, இறங்கி என் தேவதையை தேட தொடங்கினேன், எங்கும் இல்லை, வண்டி வந்த பாதையில் நடந்து பின்னோக்கிச்சென்றேன், ஜங்சன் உள்ளே சென்று முழுவதும் தேடினேன் இதுதானே என் தேவதையை நான் தொலைத்த இடம் என்று நீண்டநேரம் தேடினேன், வெளியேற முற்ப்படும்பொழுது நடைமேடை சீட்டை இருவர் கேட்க என் ஒட்டுமொத்த கோபத்தில் பதில் அவர்களுக்கு கிடைத்தது, ஒரு தேநீரகத்தின் வாசலில் தலையிலிருந்து வரும் சிவப்பு நிற திரவத்தை தடவிக்கொண்டே எழுந்தேன் உடல் முழுவதும் சில்லென்று இருந்தது இதற்க்கு முன் இத்தனை சன்னல்கள் என் சட்டையில் இல்லையே என்ற எண்ணம் தோன்றவில்லை, தேவதையை தேடிக்கொண்டே அலைந்துக்கொண்டிருந்தேன், இறுதியில் ஜங்க்ஷன் வாசலில் கால்கள் சோர்வுற்று அமர என் சட்டையின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தது என் முடிகள் இறுகிக்கொண்டே இருந்தது.

ஒருநாள் வெள்ளையுடையில் இருவர் வந்து தேவதையிடம் கூட்டிசெல்வதாக கூறினார், தேவதையும் வெள்ளையுடையில் தானே இருப்பாள் அவர்களுடன் செல்ல சம்மதித்தேன். என் நெஞ்சில் எதையோ வைத்து தேடிக்கொண்டிருந்தார் ஒருவர், காதில் இருந்து அதை கழட்டிவிட்டு நாளை தேவதையை காணலாம் இப்பொழுது சென்று ஒய்வெடு என்று கூறினார், என்னைப்போலவே அங்கிருந்த மூன்று இளைஞர்களுக்கும் வெள்ளையுடையில் இருந்தவர் கையில் எதையோ வைத்து சோதித்துக்கொண்டிருந்தார், அவர்கள் மூவரையும் எங்கோ பார்த்ததுபோலவே இருந்தது, எங்குபார்த்தேன் என்று சரியாக நினைவில்லை, அதை யோசிக்க எனக்கு நேரமும்மில்லை.

நாளை என் தேவதையை பார்க்க போகிறேன்...
முடிவெட்டி சவரம் செய்யவேண்டும்...
புதுவுடை வாங்கவேண்டும் ...
அவளை பார்க்கும்பொழுது அழாமல் இருக்கவேண்டும்...
*

தனிமாநில கோரிக்கை மற்றும் கின்னஸ் சாதனைக்காக

*
தமிழகத்துல எங்கள் ஊர் பின்தங்கிய பகுதி சுதந்திரத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி அதை கண்டுகொள்ள யாரும் இல்லை.

எங்களை அரசாங்கம் கவனிக்கவில்லை, அதனால் கவன ஈர்ப்பு போராட்டமாக நிரந்தர பந்தலை போட்டு இரண்டு மணிநேரம் , நான்குமணிநேரம், ஆறு மணிநேரம் என்று ஷிப்ட் முறையில் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் உண்ணாநிலை இருந்தோம் குறிப்பாக டயட்டில் இருந்தவர்களுக்கு முன்னிரிமை வழங்கினோம் ஆனால் எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை நான்குமணிநேரம் உண்ணாநிலை இருந்து நாப்பது தொலைகாட்சிகளில் ஒளிபரப்பி பாத்திர கடையில் ஒரு பதக்கத்தை வாங்கி வெற்றிபெற்றுவிட்டோம் என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு வசதியும் இல்லை ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பன்னிரண்டு பேர் கொண்ட குழு சிந்திக்க தொடங்கியது.

அதன் விளைவாக மாபெரும் யோசனை கிட்டியது அந்த திட்டத்தை முதலில் சோதித்து அது வெற்றிப்பெற்றால் எங்கள் ஊரிலும் அதை முயற்சிசெய்யலாம் என்று எண்ணினோம் நீண்டநாட்களாக எங்களை போலவே பக்கத்து ஊருக்காக போராடும் முனுசாமியிடம் இதை தெரிவிக்க அவர் எங்கள் யோசனையை ஏற்று 11 நாட்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தினார். என்ன ஆச்சரியம் உடனே பலன் கிடைத்துவிட்டது. முதலில் எங்கள் மாவட்டத்துக்குதான் தனிமாநில தகுதி கேட்க எண்ணினேன் ஆனால் முனிசாமி வெற்றி பல தாக்கத்தை ஏற்படுத்த, மாவட்டம் சுறுங்கி ஊர் என்ற அளவில் வந்து நிற்கிறேன் இப்பொழுதும் கேக்காவிட்டால் ஊர் சுறுங்கி தெரு என்ற அளவில் வந்துவிடும் அதனால் இந்திய இறையாண்மைக்கு ( அப்படின்னா என்னனு கேக்ககூடாது எனக்கும் தெரியாது, இந்த வார்த்தைய சேக்கலன்னா பாங்குரஸ்காரவங்க தேஞ்ச ரெக்காடு மாதரி திரும்பி திரும்பி கூவிகினு இருப்பாங்க. அதுக்காக சேத்திருக்கேன்.. ) உட்பட்டு எங்கள் ஊரை தனிமாநிலமாக அறிவிக்கவேண்டும்.

பத்துநாட்களுக்குள் மத்தியரசு அனுமதி வழங்கிவிடும் அப்படி நடந்தால் முனுசாமியின் சாதனையை முறியடித்து கின்னஸ்சில் இடம்பெறுவேன். எனக்கு என்னவோ அதிகபட்சம் ஐந்து நாட்கள்தான் அவர்களுக்கு தேவைப்படும் என்று தோன்றுகிறது. வீட்டு குழாயில் தண்ணீர் வராததற்கு மனுக்கள் குவிவது போல் அதே அளவு தனிமாநில கோரிக்கைக்கும் ஆட்கள் இருப்பதால் மத்தியரசு இதற்க்கு புதிய இணையதள சேவையை தொடங்கும் என்று எதிர்பார்கிறேன். ஓரிரு நாட்களில் இணையத்திலேயே ஒப்புதலும் அளித்தால் மிக்கமகிழ்ச்சி.

ஆனால் யாருக்காவது என்னைவிட குறைந்த நாட்களில் தனிமாநில தகுதி கிடைத்துவிட்டால் நான் சும்மா இருக்கமாட்டேன்.. எங்கள் வார்டு, எங்கள் தெரு, எங்கள் வீடு என்று என்னுடைய கோரிக்கையை சுருக்கிக்கொண்டு வருவேன். இந்த கின்னஸ் சாதனைக்கு மத்திய அரசு தோள்கொடுக்கும் என்ற நம்பிக்கையில்

-வெற்றி-[க்]-கதிரவன்
*
*
குறிப்பு : இறையாண்மை என்றால் என்ன என்று தெரிஞ்சவங்க சொல்லுங்க, அது ஒரு வகையான இனிப்பு பலகாரம் என்று நான் நினைக்க இல்லை அது ஒரு விளையாட்டுப்பொருள் என்று என் நண்பன் கூறுகிறான், பல கடைகளில் தேடியும் அது கிடைக்கவில்லை. யாரிடமாவது இறையாண்மை இருந்தால் எனக்கு இரண்டு கிலோ கொடுங்கள்.
*

கரைந்த மௌனங்கள்

*
நின்கானநட ததெல்லாம் நீக்கமற
நின்றுநிற்க நித்தமரும்நில வோடு
நீகை கோர்த்து நிற்க.
எத்தி சையில்யான் சென்றுஎவ
ரிடத்தில் எடுத்துரைத்து என்
கனவை சிறைப்பிடிப்பேன்
மேற்க்கத்திய பயணத்தால்
மௌனகடல் பரவிவிடவட திசையில்
நான் சென்று மௌனத்தின் சுவடு
மெல்ல மௌனமாய் விலகிநிற்க
கரைந்த மௌனத்தின் சிலத்துளிகள்
காலம் கடந்தும் நிற்ப்பதேனோ.

*
குறிப்பு : எழுத்துப்பிழைகள் எல்லாம் திட்டமிட்ட பிழைகள்தான்.