வழிகளற்ற பாதை !


எதையோ நினைத்து
எதையோ பேசி
எப்படியோ போகிறது
வாழ்க்கை

எனக்குத்தான் தெரியவில்லை
எங்கே செல்கின்றது
என்று !
எங்கே செல்வது
என்று !

முடிவுரை அல்லது முன்னுரை ...

*

திட்டமிட்டே
காலம் தாழ்த்தி
மௌன கூட்டங்களை
விலக்கிக்கொண்டு
விடிந்ததும் வந்த
ஓலை

அணிவகுத்து வந்த
முற்றுப்புள்ளிகளில்
எதையோ
சொல்லிக்கொண்டிருக்கிறது
இறுதிப்புள்ளி ....

வெற்றி தோல்விகள்
அற்ற
முடிவுரை
தெரியவில்லை
முன்னுரையாகக்கூட
இருக்கலாம்

நிகழ்வு : ௨௦-௦௩-௨௦௧௨
நிகழ்வின் விளைவு : ௨௧-௦௩-௨௦௧௨

நான் தொடங்கியது...

*
என்றோ
நான் தொடங்கியது...
முடிந்ததாக
நான் நினைத்தது...

நெடுநாள் சென்று
ஒரு திருநாளில்...

நீங்களே
காற்புள்ளி வைத்தீர்கள்,
நீங்களே
யூகத்தில் தொடர்ந்தீர்கள்...
நீங்களே
என்னை வெறுத்தீர்கள் ...
நீங்களே
முடிவுகளையும் எடுத்தீர்கள்...
நீங்களே
முற்றுபுள்ளி வைக்க நினைத்தீர்கள்...
நீங்களே
நான் முற்றுபுள்ளி வைத்ததாகவும்
நினைத்தீர்கள்..

இதில்
என் பங்கு என்ன ?

*

இயல்பு !

*
ஒரு
குவளை பாலில்
ஒரு துளி
குருதி

மெல்ல பாலினூடே
சென்று தரையை
தொட முயற்சித்து
முடிந்தளவு
பாலின் நிறத்தை
மாற்றி தரையை
தொடாது பயணம்
முடிந்தது

எதன் பொருட்டும்
வருத்தம் கொள்வது
பிழையாகிவிடும்
இரண்டும்
தன் இயல்பைதானே
வெளிக்காட்டியது...

சில கொலைகளை செய்யவேண்டும் !!!

*

கிறுக்கிக்கொண்டிருக்கும்
நினைவுகளையும்
உணர்வுகளையும்
இரக்கமற்ற எண்ணங்களையும்
முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்

மேலும்

சில கொலைகளை
செய்யவேண்டும்

ஒரு செயலை
ஒரு தவறை
ஒரு மன்னிப்பை

ஆயுதம் கிடைத்தால்
தாராளமாக கொடுங்கள்
உங்களுக்கு சன்மானம்
கொடுக்கப்படும்

எதையாவது எழுத வேண்டும்...

*

எழுதிவிட வேண்டும்
ஒரு கவிதையேனும்
அல்லது சொற்குவியலில்
ஒன்றை

எதையோ எழுத நினைத்து
எதைப்பற்றியாவது எப்படியாவது
எழுதிவிட வேண்டும்

இரண்டு கவிதைகளையும்
ஒரு கோப்பை தேநீரையும்
காலை உணவாக எடுக்க
நினைத்ததை...

முகமுடிகள் கழற்றிவிட்டு
ஒரு முழுநாள்
இருக்க
நினைத்ததை...

மழலைகளின்
பால்மனத்தையும் சொற்களையும்
சேகரிக்க
நினைத்ததை...

மனம் பிறழ்ந்தவனின்
அருகில் அமர்ந்து
அவனுடன் உரையாட
நினைத்ததை...

இன்னும்... இன்னும்....
நினைத்தது அனைத்தையும்....

சொற்களை தேடி
தேர்ந்தெடுத்து விட்டேன்
மயிலிரகுக்காக காத்திருக்கிறேன்
தானாக உதிருமென்று....

காலம்தாழ்ந்த பயண`க்குறிப்பு

*

எல்லையை கடக்கும் முன்பே மழை பொழிய ஆரம்பித்தது, மழையில் பயணம் தொடர்ந்தது, பேருந்து நிலையத்தின் வெளியே இறங்கி அடுத்த பேருந்தில் ஏறிக்கொண்டேன். பயணசீட்டு கொடுக்கவில்லை காசுமட்டும் வாங்கிக்கொண்டார் நடத்துனர் அனைவரிடத்திலும். எங்கும் பார்க்கினும், மரங்கள் , பசுமை என்று அழகாக காட்சிக்கொடுத்து கொண்டிருந்தது பேருந்து சன்னல், ஊர்கள் தோறும் பெரிய வீடுகள் அதை சுற்றி செடிகள் வைப்பதற்கு இடம் என்று அவர்களின் வசதியை காட்டியது, முன்பு பலமுறை வந்திருந்தும் கூர்ந்து கவனிக்க தவறியது இது, சிந்தனைகள் திடமாக இல்லாமல் மாறிக்கொண்டே இருந்தது தடுமாற்றத்திர்க்கான காரணமும் புலப்பட்டது போல தோன்றியது, வெளியில் தெரியும் பெயர் பலகை எழுத்துக்களை எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன் மிக சிலவற்றை சரியாகவும் படித்ததாக ஆங்கில பெயர்களை வைத்து அறிந்துக்கொண்டேன்.

ஓட்டபாலம் பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்கும் என்று பார்த்தால் இரண்டு நிமிடத்துக்குள்ளே மீண்டும் பேருந்தை இயக்க ஆரம்பித்துவிட்டார், இதே போல் அடுத்த இரண்டு சற்று பெரிய ஊர்களிலும் செய்தார், வெளியில் பார்த்துக்கொண்டே செல்லும்பொழுது சிந்தை எங்கெங்கோ சென்றுக்கொண்டிருந்தது சில நேரம் வெளியே வேடிக்கை பார்ப்பதிலும், சில நேரம் என்னையறியாமல் வந்து சென்ற பழைய பயணங்களிலும் அதன் மூலத்திலும், எழுத்துக்களை கூட்டி படிப்பதிலும் சில நேரம் மௌனமாகவும் அலைகள் போல் வந்துக்கொண்டே இருந்தது. ஊர் வந்தவுடன் பெரும்பாலானோர் முதல் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டனர் நான் எங்கு இறங்குவது என்று தெரியாமல் யாரையும் கேட்காமலும் வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டேன். அடுத்த நிறுத்தம் வந்தது, பேருந்து நிலையம் போல் தோன்றியது அங்கே இறங்கி பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து வலப்பக்கமாக நடக்க தொடங்கினேன்.

சில நிமிடங்களிலே இரண்டு வாரணங்கள் தெரிந்தது, சரியான பாதையில்தான் பயணிக்கிறோம் என்று உறுதிபடுத்தியது. ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது, அரிதாரம் பூசியிருந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் வரிசையாக சென்றுக்கொண்டிருந்தனர்.
கையில் புல்லாங்குழல், நெற்றியில் மயிலிறகு அல்லது கைகளில் சிறு விளக்கு வைத்துக்கொண்டு ஊர்வலம் சென்றனர், சிலர் நடனமாடிக்கொண்டு சென்றனர் அவர்களுக்காக வாத்தியங்களும் இசைக்கப்பட்டது, உரியடி திருவிழாவும் நடந்தது, உரியடி வீரர்கள் மீது தண்ணீர் அடிக்க ஆரம்பித்தவுடன் அவர்களை சுற்றி சிறிய வட்டமாக இருந்த கூட்டம் மெல்ல மெல்ல பெரியவட்டமாக நீண்டுக்கொண்டே சென்றது, பெண்கள் பெரும்பாலும் ஒரே போல் உடை அணிந்திருந்தனர் கரையின் நிறம் மட்டும் வேறு நிறங்களில் இருந்தது , ஆண்களும் அதே போலவே ஒரே மாதரி உடையுடன் வலம்வந்தனர்.

காபி குடிக்க வந்த பாதையிலேயே சற்று பின்செல்லவேண்டி இருந்தது, மீண்டும் திரும்ப கூட்டம் அதிகமாகி இருந்தது, பொருட்களை வைத்துவிட்டு கூடத்தில் நின்றேன், நெடு நேரம் சென்று கூப்பிட்டனர் , கட்டாயம் சட்டையை கழட்டவேண்டும் என்று ஒரு சிறுவன் கூறினான் , அதை செய்தும் பனியனும் கூடாது என்றான் , கழட்டிய பின்னே உள்ளே அனுமதி கிடைத்தது எங்கெங்கோ சென்று தான் உள்ளே செல்ல இயலும் என்று நினைத்தது தவறாக முடிந்தது, உள்ளே நுழையும் பொழுதே வாத்தியங்கள் முழங்க மூன்று வாரணங்கள் நின்றுக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது, இன்னும் உள்ளே செல்ல எதையோ அடுப்பில் வைத்து சுட்டுகொண்டிருந்தார்கள் அது குழிபணயாரம் போன்று இருந்தது, அதையும் தாண்டி உள்ளே செல்ல, தூரத்தில் இருந்தே நேராக பார்த்துக்கொண்டு சென்றேன் நெருங்கியதும் சில நொடிகள் கூட நிற்க விடவில்லை, இதை பார்க்கவா இங்கே வந்தேன் என்றால் ஆம் அல்லது அதை காரணமாக வைத்து அந்த இடத்தை பார்க்கவந்தேன் என்றே தோன்றியது, எஞ்சிருந்த நம்பிக்கையை தன்னகத்துள் எடுத்துக்கொண்ட இடம் , அது சரியா தவறா என்று எனக்கு ஆராயும் பக்குவவும் இல்லை ஆனால் இழப்பு இருப்பதாக தோன்றியது, மெதுவாக நடந்து பின்புறம் சென்றேன் எங்கு காணினும் கூட்டமாக இருந்தது, சிறிது நேரம் ஒரு வரிசையில் நின்றேன் நேரம் ஆக, வேண்டாம் என்று கீழே இறங்கி வந்து வாரணங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கே வந்திருக்க வேண்டும் காலம்தாழ்ந்து வந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தேன், அந்த பகுதிக்கு பயணம் செய்யவேண்டும் என்று நெடுநாட்களாக தோன்றியதால் மேற்க்கொண்ட பயணம், பல பயணங்கள் ஏமாற்றத்தையும் , பல பயணங்கள் மனநிறைவையும் தந்திருந்தன, இந்த பயணம் ஏமாற்றத்தையும் மனநிறைவையும் ஒருசேர தரும் என்று தெரிந்தே தொடங்கிய பயணம் ஆக இது ஒரு சிறப்புபயனமும் கூட என்று கருதினேன், அந்த இடத்தை விட்டு கிளம்பி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினேன், அடுத்த ஊர் செல்ல பேருந்து தயாராக இருந்தது.